வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இவ் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயம் முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பெண்கள் வன்முறை, போதைவஸ்து பாவனை, வன்புனர்வுக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியவாறு மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்று ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அன்று கிரிசாந்தி- வித்தியா – சரண்ஜா- இன்று ஹரிஸ்ணவி என தொடர்கதைக்கு முடிவில்லையா..?, அரசே பெண்களுக்கு பாதுகாப்பு தா, யுத்தத்தின் பின் பெண்கள் கிள்ளுக்கீரைகளா.., பெண்களை சுதந்திரமாக வாழவிடு, மாணவிகளை பாடசாலை செல்லவிடு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய், குற்றவாளிகளை தூக்கில் போடு, அரசாங்கமே பெண்களை பாதுகாப்பு என்ன? என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடம் கையளித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, சிறிரொலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரமுகர்கள், புதிய மாக்சிச லெனின் கட்சியின் பிரமுகர்கள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரமுககர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நாளை வவுனியாவில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: