Home » » மைத்திரியுடன் புகைப்படத்தில் காணப்படும் இரு சிறார்களும் எங்கே? கண்டுபிடிக்க C.I.D நடவடிக்கை

மைத்திரியுடன் புகைப்படத்தில் காணப்படும் இரு சிறார்களும் எங்கே? கண்டுபிடிக்க C.I.D நடவடிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர் காணாமல்போனவர்களின் அன்னையரிடம் உறுதியளித்திருப்பதாக அவர்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயவதனி, நெடுங்கேணி சின்னபூவரசங்குளத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சந்திராணி ஆகிய இரண்டு தாயார் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களின் மகள் மற்றும் மகன் தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.
காசிப்பிள்ளை ஜெரோமி, யோகேஸ்வரன் மயூரன் ஆகிய இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளனர். பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசுரம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேன அந்த இருவருடன் ஏனைய சில மாணவ மாணவியரும் இருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர்
காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர்
அத்துடன், அதே போன்ற வீடியோ காட்சியொன்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டிருந்ததைக் கண்டு இந்தத் தாயார் இருவரும் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு புகைப்படத்திலும் காணொளியிலும் காணப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினர் இந்த அன்னையர் இருவரையும் நேற்று புதனன்று விசாரணை செய்து, அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதுடன் காணாமல் போயுள்ள அவர்களின் பிள்ளைகள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |