Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டு போதனா வைத்தியசாலை, சாந்தியின் மரணம் தொடர்பில் மகப்பேற்று மருத்துவர், திடீர் மரண விசாரணைக்குப்பிணை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 2012ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 17ஆம் திகதி மரணமான திருமதி கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் வழக்கில் சம்பந்தப்பட்ட மகப்பேற்று வைத்தியர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் பெறுமதியான நான்கு சரீரப்பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று 28ஆம் திகதி அனுமதி வழங்கியது.
கடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வயிற்று வலியால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 17ஆம் திகதி சத்திர சிகிச்சையின் பின் மரணமானதாகவும் இந்த மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் சாந்தியின் கணவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தமது மனைவி மரணமானமை தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்கள் இருவருக்கெதிராக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்ப்பிரிவு தலைமையகம் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு அறிவித்திருந்தார்.
இக் கடிதங்கள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, குற்றப்புலனாய்வுப்பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு ஆகியோருக்கு அனுப்பியிருந்தனர்.
இந்தக் கடிதத்துக்கு அமைவாக குற்றப்புலனாய்வுப்பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மத்துகோரள, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு விசாரணை நடத்துமாறு பணித்திருந்தார்.
சாந்தி 2012.09.11ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட வியாதி ஒன்றுக்காக சிகிச்சைக்கென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் ஒரு வார கால சிகிச்சையின் பின்னர் 17ஆம் திகதி இறந்ததாகவும் இது தொடர்பில் இரு மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததாகவும் அதனால் தனக்கு இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின் தெரிவித்திருந்தார்.
இந்த ஒழுங்கில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, மரண விசாரணை, பிரேத பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்ட கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் சடலம் கள்ளியன்காடு மயானத்தில் இருந்து 23.07.2013ல் தோண்டி எடுக்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் மரணவிசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இப் பெண்ணின் சடலம் 30.07.2013 அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாவால் நடத்தப்பட்ட விசாரணைகளில், 23பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அம்பாறை பொது வைத்தியசாலையின் ஆலோசக சட்ட வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட பிணச் சோதனை அறிக்கை என்பவற்றினையும் கருத்தில் கொண்டு சட்ட வைத்திய அதிகாரி மற்றும், மகப்பேற்று வைத்தியர் ஆகியோரை 28.08.2015 மன்றில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த மரணம் தொடர்பான மரண விசாரணைத் தீர்ப்பில் கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் இறப்பானது வயிற்றில் ஏற்பட்ட உயர் அழுத்தத்தால் இரத்தக் குழாய்கள் அமத்தப்பட்டு, இரத்தத்தில் கழிவுப் பொருள்கள் பரவியதன் தாக்கத்திகால், இருதய துடிப்புக் குறைந்து , இதயம் இயங்க மறுத்ததனால் உண்டானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் 28ஆம் திகதி மன்றில் ஆஜரான திடீர் மரண விசாரணை அதிகாரி வெப்ரிஸ் பெர்ணான்டோ, மகப்பேற்று மருத்தவர் கே.ஈ.கருணாகரன் ஆகியோருக்கு பதில் நீதவான் யு.எல்.எம்.முனாஸ் ஒரு லட்சம் பெறுமதியான நான்கு சரீரப்பிணையில் செய்ய அனுமதி வழங்கினார்.

Post a Comment

0 Comments