Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தொகுதிவாரி தேர்தல் முறையினால் முஸ்லிம்களும் மலையக மக்களும் பாதிக்கப்படலாம்: பொன்.செல்வராசா

தொகுதிவாரி தேர்தல் முறையினால் சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களும், மலையக மக்களும் பாதிக்கப்படலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எந்த முறையில் நடைபெறப்போகின்றது என்பதை நாங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
எந்த சட்டமூலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறப்போகின்றது என்பதை சரியாக கூறமுடியாத நிலை உள்ளது.
எந்த முறையில் பொதுத் தேர்தல் நடந்தாலும், இலங்கை தமிழர்களை பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை. ஆனால், ஏனைய சிறுபான்மை இனங்களான மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பொறுத்தவரையில் தொகுதிவாரித் தேர்தல் முறை சிக்கலான ஒன்றாக பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
ஆகையினால், சிறுபான்மை இனங்கள் இந்த விடயம் குறித்த சில சிக்கல்கல்களை தீர்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எந்த முறையில் தேர்தல் வருகின்றது என்பது பற்றி நாங்கள் அக்கறை கொள்ளாவிட்டாலும் கூட, இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம் என்பதனால், நாங்களும் இதிலே பங்குக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த தேர்தல் செப்டெம்பருக்கு முன்னர் நடைபெறுமா அல்லது பின்னர் நடைபெறுமா என்பது பற்றி ஒரு கேள்வி உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இவ்விடயம் குறித்து இழுபறி நிலையுள்ளது.
இந்த முரண்பாடு எதைக் காட்டுகின்றது என்றால், செப்டெம்பரில் வரும் ஐ.நா. அறிக்கை சில வேளைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், அந்த தாக்கத்தின் விளைவால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த தரப்பு கருதுகின்றது.
இரண்டும் கெட்டான் நிலையிலே ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு முரண்பாடான நிலையில் நாடாளுமன்றம் கலைவது எப்போது என்று அரசாங்கம் திட்டவிட்டமான முடிவை எடுக்க முடியாமல் குழம்பிப்போயுள்ளது.
தற்போதைய புதிய அரசாங்கத்திற்கு அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லை. அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லாதபோது, நாம் எதிர்ப்பார்க்கின்ற தமிழர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென்பது வேறு சர்ச்சை.
இவற்றையெல்லாம் கோர்வையாக்கி இந்த நூறு நாள் முடிந்துவிட்டது. இனிமேலும் தமிழர் பிரச்சினை தீர வேறு என்ன வழி இருக்கின்றது என்று தமிழர்கள் பேசிக்கொள்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை இல்லாத நேரத்தில் நூறு நாள் என்ன? ஆயிரம் நாட்கள் முடிந்தாலும் கூட இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, தமிழர்களாகிய நாங்கள் நிலைமையை புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். புரிந்துகொள்கின்ற தன்மை எமக்கு வேண்டும். ஆகவே ஒரு புதிய நாடாளுமன்றத் தேர்தல் மூலம் ஒரு புதிய அரசாங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கின்றபொழுது, அந்த வாய்ப்பை பெறக்கூடியவர்களாக இருப்போம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments