Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

24 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கேசன்துறையை வரை பயணம் செய்கிறது யாழ்தேவி!

24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் இன்று காங்கேசன்துறை வரை பயணம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கிறார். விசேட ரயிலில் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணிக்க இருப்பதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டதையடுத்து வடபகுதிக்கான ரயில் கட்டமைப்பை மீளமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்திய கடனுதவியுடன் இர்சொன் நிறுவனத்தி னால் ரயில் பாதைகள் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டன.இதன்படி, வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை 2009 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையான சேவை 2011 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கிளிநொச்சி வரையான யாழ்தேவி சேவை 2013 செப்டெம்பரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி - பளை வரையான ரயில் சேவை கடந்த மார்ச் மாதத்தில் ஜனாதிபதி ஆரம்பித்தார். அடுத்த கட்டமான பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசன் துறைக்குமிடையிலான 18 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை துரிதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இன்று சுபநேரத்தில் ரயில் சேவையை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார்.

Post a Comment

0 Comments