பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாத இயக்கம் இந்தியாவில் குற்றச்செயலில் ஈடுபடும் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டால் தண்டனையில் இருந்து தப்பிக்க பல வழிகளை பின்பற்றி வருகிறது. இந்தியாவில் இளஞ்சிறார்கள் எந்த குற்றச்செயலில் ஈடுபட்டாலும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை தான் தண்டனை கிடைக்கும் எனவே பிடிபடும் தீவிரவாதிகள் தங்களுக்கு 17 வயது ஆகிறது என்று கூறவேண்டும் என தீவிரவாதிகளுக்கு அறிவுறுத்தியிருப்பது இப்போது தெரியவந்து உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள முல்லான் நகரை சேர்ந்த லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதியான மொகத் நவீதுஜூட் காஷ்மீர் போலீசாரிடம் பிடிபட்டான். அவன் பாதுகாப்பு படையினரிடம் தனக்கு 17 வயதாகிறது என்று கூறினான். ஆனால் அவனது உடல் தோற்றத்துக்கும் வயதுக்கும் வித்தியாசம் இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி அவனது வயது 22 என கண்டுபிடித்தனர்.
இதுபற்றி அவனிடம் பாதுகாப்பு படையினர் விசாரித்த போது அதிர்ச்சியான தகவலை அவன் வெளியிட்டான். அவன் இந்திய பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டால் 17 வயது தான் என்று கூற வேண்டும் என லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாத தலைவர்கள் தங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தன்னுடன் 6 பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கடந்த 2012–ம் ஆண்டு கெரன் சென்டர் வழியாக ஊடுருவியதாகவும் தெரிவித்தான்.
இந்தியாவில் உள்ள இளஞ்சிறார்களுக்கான சட்டவிதியை பயன்படுத்தி பிடிபடும் தீவிரவாதிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க லஷ்கர்–இ–தொய்பா இயக்கம் இந்த புதிய உத்தியை பயன்படுத்துவது இதன்மூலம் தெரியவந்து உள்ளது.
0 comments: