அரச வைத்திய சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒரு மாத காலமாக மூடப்பட்டடுள்ளதனால் இப்பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரினால் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஜனாத் அபேகுணரத்ன கடந்த 13ஆம் திகதி கொட்டகலை இ.தொ.கா. பிரதான காரியாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவருக்கு எதிராக வீண்பழி சுமத்தப்பட்டு பேசியதாகவும் அமைச்சரின் வேண்டுகோள்படி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியை வெளியேற்றுமாறு மக்கள் ஆா்ப்பாட்டம் செய்ததையடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் 16.06.2014 அன்று முதல் வைத்திய அதிகாரி காரியாலயம் மூடப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
எனினும் இது சம்பந்தமாக சுகாதார அமைச்சா் மைத்திரிபால சிரிசேனவிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அதற்கு உரிய முடிவு கிடைக்காததனால் தொடர்ந்தும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை மூடுவதற்கு தீா்மானித்துள்ளதாக மேற்படி சங்கம் தெரிவிக்கின்றது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றிய 2 வைத்தியர்களும் 35 தாதிமார்களும் தற்போது லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தற்காலிகமாக பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
கொட்டகலை பகுதியில் உள்ள தாய்மார்கள் உட்பட கா்ப்பிணி பெண்களுக்கு லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கின்றமை குறிப்பிடதக்கது.
மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மூடப்பட்டுள்ளதனால் குறிப்பாக ஹட்டன் குடாகம, கொட்டகலை மேபீல்ட், பத்தனை, போகாவத்தை, சென்கிளயார் போன்ற பிரதேசங்களில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் பல சிரமங்களுக்குட்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமாக தாய்மார்கள் தெரிவிக்கையில்...
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மூடப்பட்டுள்ளதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் லிந்துலை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு பல சிரமங்களுக்கும் மத்தியில் சென்று சிகிச்சை பெறுவதாக அவா்கள் தெரிவித்தனர்.
அத்தோடு பொருளாதார ரீதியிலும் தாங்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மேற்படி காரியாலயத்தை திறந்து சிகிச்சை வழங்க வேண்டும் என தாய்மார்கள் மேலும் தெரிவித்தனர்.
இதை பற்றி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஜனாத் அபேகுணரத்னவிடம் கேட்டபோது,
தான் உட்பட கொட்டகலை சுகாதார வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியர்கள் உட்பட்ட ஊழியர்களும் பாதுகாப்பு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தால் கொட்டகலை சுகாதார வைத்தியசாலையை திறப்பதாக டாக்டர் தெரிவித்தார்.
0 comments: