மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின்கீழ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ கல்வியை அபிவிருத்தி செய்யும் விசேட மாநாடு புதன்கிழமை(8) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்;போது, 'மட்டக்களப்பு மாவட்டத்தில் 500இற்கும் அதிகமான முன்பள்ளிகள் செயற்படுகின்றபோதிலும் இவற்றில் 50 சதவீதமான பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறுவதில்லை. அத்தகைய முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பமாகும்' என்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான மாவட்ட குழுவும் அமைக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கடம்பநாதன் சிறுவர் கல்வி தொடர்பாக விரிவுரை நிகழ்த்தினார்.
மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களையும சேர்ந்த பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவி செயலாளர் கே.ரங்கராஜன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே.முரளீதரன் உட்பட திணைக்கள தலைவர்கள், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், பொலிஸ் நிலையங்களின் சிறுவர் மற்றும் மகளிர் பரிவு பொறுப்பதிகாரிகள் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

0 comments: