மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பெரும்பான்மையினக் குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ்கள்; வழங்கப்பட வேண்டும், பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்ற வேண்டும் உட்பட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சிங்கள ராவய அமைப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்ற சில பெரும்பான்மையினக் குடும்பங்கள் ஆகியோர் மட்டக்களப்பு மங்களராமய விகாரையிலிருந்து மட்டக்களப்பு கச்சேரிக்கு பேரணியாகச் சென்றனர்.
இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் கலந்துரையாடிவிட்டு, தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இக்கலந்துரையாடலில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்ணமும் கலந்து கொண்டார்.
இதன்போது, இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனத்திற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்;.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பெரும்பான்மையின மக்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும். இம்மக்களுக்கான வதிவிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும், கிராம அலுவலகரின்; சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் மகஜரில் முன்வைத்தனர்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 106 பெரும்பான்மையினக் குடும்பங்கள் வசிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்தார். இதேவேளை பட்டிப்பளைபிரதேச செயலாளராக ஒரு பெரும்பான்மையினத்தினரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments