தீவிரவாத போக்குக்கொண்ட இனவாத பங்காளிக்கட்சிகளின் விருப்பத்துக்கு அமையவே இலங்கையரசாங்கம் நடந்து கொள்ள முயல்கிறது. இதன் காரணமாகவே வட மாகாண சபையையும் இயங்கவிடாமல் அரசாங்கம் தடுத்துவிட முயலுகின்றது. இந்த நிலை தொடருமானால் சர்வதேச சமூகத்திடம் இது சம்பந்தமாக கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.
பல்வேறு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. வட மாகாண சபை உருவாக்கப்பட்ட நிலையில் பல்வேறு தடங்கல்களும் சிக்கல்களும் காணப்படுகின்றன. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிகாரத்தை பெறுவதிலோ, தருவதிலோ பல்வேறு கஷ்டங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.
நல்லிணக்கத்துக்கான அடையாளங்களையோ, தீர்வுகளையோ தருவதில் இந்த அரசாங்கம் காட்டி வரும் அசமந்தப்போக்கை உலக நாடுகளும் அறியும். நாமும் அறிவோம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன் நல்லதொரு இணக்கத்தை இந்த அரசு கொண்டு வரவில்லையாயின் அதன் எதிர்விளைவுகள் எவ்வாறு இருக்குமென்பதை புரிந்துகொள்ள முடியும். திருகோணமலையில் 13 உள்ளூர் ஆட்சி சபைகள் இருந்த போதிலும் மூன்று சபைகளே கூட்டமைப்பின் கையில் உள்ளன. ஏனையவை அரசாங்கத்தின் கையில் உள்ளது, ஒரு காலத்தில் அந்த உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு கூட்டமைப்புக்கு இருந்தது. ஆனால், அந்த நிலை எமக்கு இன்று இல்லை. காரணம் ஏனைய இனங்களுடைய விகிதாசார அதிகரிப்பு. அது மாத்திரமல்ல யுத்தம் காரணமாக குடிபெயர்ந்து மீளக்குடியேறாமல், வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படாமல், அடையாள அட்டை இல்லாமையினால் வாக்களிக்க முடியாத நிலையில் பலவிதமான கஷ்டங்களை அவர்கள் எதிர்நோக்கி இருக்கின்ற காரணத்தின் நிமித்தம் இப்பகுதிகளின் ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்ற முடியாமல் இருக்கின்றது. ஆகையால் ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றிய இடத்திலாவது எமது சேவைகளை இயன்றளவுக்கு செய்ய வேண்டியது எமது கடமை.
சுயநிர்ணய அடிப்படையில் எமக்கு பரிபூரண அதிகாரம் வேண்டுமென்று கேட்கின்றோம். அவ்விதமான கோரிக்கையை முன்வைக்கும் நாங்கள் ஒரு உள்ளூராட்சி நிர்வாகத்தை சரியாக நிர்வகிக்கக்கூடிய தகுதி எமக்கு இல்லாமல் இருக்குமாக இருந்தால் எப்படி எமக்கு உரிமை தாருங்கள் என்று அரசாங்கத்திடம் கோர முடியும். ஆகையால் எமது உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்களில் குறைகள், இழுக்குக்கள் வருகின்றபோது அது எமது அடிப்படைக் கோரிக்கையை பாதிக்கின்றது. ஆகையால் உள்ளூராட்சி சபைகளை சிறந்த முறையில் நடத்த முயற்சி எடுக்கப்பட வேண்டும். ஒற்றுமையும் இணக்கப்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அவப்பேரை உள்ளூராட்சி நிர்வாகத்தினர் சம்பாதிக்க வேண்டியேற்படும். இதனால் மக்களுக்கும் கட்சிக்கும் இனத்துக்கும் ஏன் உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகையால் தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை எதிர்கட்சித்தலைவர் தனது கருத்தை தெளிவாகக் கூறினார். நாங்கள் ஆட்சியை அமைக்காவிட்டாலுங்கூட, கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் இருக்கின்றார்கள். வேறு எந்தவொரு கட்சியும் தனிப்பலத்துடன் இவ்வளவு உறுப்பினர்களை மாகாண சபையில் கொண்டிருக்கவில்லை தனிக்கட்சியென்ற வகையில்,
எமது கட்சிதான் கூடுதலான அங்கத்தவர்களை கிழக்கு மாகாண சபையில் கொண்டிருக்கிறது. ஆளும் தரப்பினர் நாலைந்து கட்சிகளை சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரியப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்ற முடியாமல் போய் விட்டது. கைப்பற்றியிருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தால் ஆட்சியை நாம் அமைத்திருக்கலாம். முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸை சார்ந்த ஒருவருக்கு நாங்கள் தரத் தயாராக இருக்கிறோமென்று தேர்தல் முடிவுகளுக்கு பின்னும் முன்னும் பகிரங்கமாக அறிவித்திருந்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்திலிருந்து விலகி தனித்துக் கேட்டு 7 இடங்களைப் பெற்று மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்கள். அரசாங்கம் ஆட்சியை அமைப்பதற்கும் அரசு விரும்பிய ஒருவர் முதல் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கும் அவர்கள் உதவினார்கள். கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு உதவிய முஸ்லிம் காங்கிரஸ் ஆனது அதன் விளைவுகளை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் 13ஆவது அரசியல் சாசனத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சித்தபோது ஏனைய மாகாண சபைகளில் தமது பலத்தைப் பயன்படுத்தி மற்ற மாகாண சபைகளின் தீர்மானங்களை நிறைவேற்றிய பொழுதும்கூட கிழக்கு மாகாண சபையில் அதற்கு மாறான ஒரு தீர்மானம் முஸ்லிம் காங்கிரஸினால் முன்மொழியப்பட்டு கூட்டமைப்பினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டு, கூடுதலாக எமது முயற்சி காரணமாக அரசாங்கத்தின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் உண்மையான நிலைமையை புரிந்துகொள்வதற்கு காலம் வந்திருக்கிறது அல்லது வந்து கொண்டிருக்கிறது என்று நினைப்பதற்கு இடமுண்டு.
இது விடயம் சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரு தேவையிருக்கின்றது. மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது, அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை மக்களுக்காக வல்ல. இந்த நாட்டில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும், மாற்றம் ஏற்படுத்துவதனூடாக எல்லா இனங்களும் அதிகாரங்களைப் பெற்று இந்த நாட்டில் சமத்துவமாக வாழக்கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். அந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது தந்தை செல்வாவினால். தமிழ் மக்களினால் அதிலும் விசேடமாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, முஸ்லிம் மக்களும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமென்று கருதுகின்றோம். அதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் செயற்பாடு அந்த தெளிவின் அடிப்படையில் அமையாவிட்டால் அவர் தமது இனத்துக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எதை நாம் கேட்கின்றோம் எங்களுடைய பாதுகாப்பைக் கேட்கிறோம். காணியின் பாதுகாப்பை கேட்கிறோம். எமது மொழியின் பாதுகாப்பைக் கேட்கின்றோம். எமது கலாசாரம், சமூக, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி ஆகிய இவ்விதமான விடயங்களில் அதிகாரங்களைத் தரும்படி கேட்கின்றோம். நாங்கள் வாழும் பிரதேசங்களில் எங்களது தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய அதிகாரம் எமது கையில் இருக்கவேண்டுமென்று கேட்கிறோம். அதில் என்ன தவறு? அவ்விதமான முயற்சிக்கு முஸ்லிம் மக்கள் தமது பரிபூரணமான ஒத்துழைப்பைத் தர வேண்டாமா, கொடுக்க வேண்டியது உங்களது கடமையல்லவா, அவ்விதம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் பல நன்மைகள் வருமென்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாமா?
உங்கள் தலைவர்களில் சிலர் அமைச்சர்களாக, அதிகாரம் அற்ற அமைச்சர்களாக இருந்து, பிரயோசனமற்ற பதவிகளை வகிக்கின்ற அமைச்சர்களாக இருந்து, அவர்கள் தமது சுகபோக வாழ்வுக்காக வாழ நீங்கள் உதவ வேண்டுமா என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலம் வந்து அந்த கேள்வியை முஸ்லிம் மக்கள் தங்களிடம் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இன்றைய அரசியல் நிலைமை சம்பந்தமாக, எமது போராட்டம் சம்பந்தமாக, ஒட்டுமொத்தமாக எமது மக்களின் நிலைமைகள் சம்பந்தமாக சில கருத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நீங்கள் அறிந்து கொள்வது அவசியமென்று நினைக்கின்றேன். வட மாகாண சபை தேர்தல் புரட்டாதி மாதம் நடைபெற்றது. பல்வேறு அழுத்தம் காரணமாகத்தான் தேர்தல் நடந்தது. விசேடமாக சர்வதேச அழுத்தம் கூடுதலாக இருந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னாக சில தீவிரவாத பேரினவாதக்கட்சிகள் தேர்தல் நடப்பதற்கு முன்பதாக 13ஆவது சாசனத்தை மாற்றியமைக்க வேண்டும், இணைப்பு சம்பந்தமான ஒழுங்குகள் நீக்கப்பட வேண்டும், மாகாண சபை விடயம் சம்பந்தமாக பாராளுமன்றம் தன்னிச்சையாக சட்டம் நிறைவேற்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், சட்டம், ஒழுங்கு, காணி அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும், அவ்விதம் நீக்கப்பட்ட பின்புதான் வட மாகாண சபை தேர்தல் வைக்கப்பட வேண்டும், அது நீக்கப்படும் வரை தேர்தல் வைக்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். அவ்விதமான கருமங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கமும் சில முயற்சிகளை எடுத்தது. அமைச்சர் சபை சில தீர்மானங்களை எடுத்தார்கள். அதற்குரிய சட்டங்களும் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டது. அந்த சூழலில்தான் த.தே. கூட்டமைப்பு பாரதப் பிரதமரையும் ஏனைய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்ததன் காரணமாக இந்தியாவின் முயற்சி காரணமாக அந்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. கைவிடப்பட்டதென்று நான் கூறமாட்டேன். ஆனால், அவர்கள் விரும்பிய வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
அதன்பின்பு தான் பல நாடுகளின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தல் நடந்தது. நமது மக்கள் எல்லா மாவட்டங்களிலும் பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் இராணுவக்கெடுபிடியின் மத்தியில் வற்புறுத்தலின் மத்தியில் வடமாகாண மக்கள் அந்தத் தேர்தலை எதிர்நோக்கினார்கள். இது விடயம் சம்பந்தமாக சார்க் நாட்டிலிருந்து வந்த கண்காணிப்பாளர்கள், பொதுநலவாய நாடுகளின் கண்கணிப்பாளர்கள், உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் அறிக்கைகளை படித்துப் பார்த்தால் போதிய ஆதாரம் இருக்கின்றது. என்ன விதமாக இராணுவம் வடக்கில் செயற்பட்டது என்பதை நிரூபிக்க. அப்படி இருந்தும்கூட மக்கள் அமைதியாக, உறுதியாக செயற்பட்டு வாக்களித்ததன் நிமித்தம் 38 இடங்களில் 30 இடங்களை த.தே. கூட்டமைப்பு கைப்பற்றியது.
கிழக்கு மாகாணத்தில்கூட 11 பேர் எமது உறுப்பினர்கள். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சர் உண்மையில் தெரிவு செய்யப்பட்டாரா? அல்லது தெரிவு செய்ய வைக்கப்பட்டாரா என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் மக்களுடைய சிந்தனையை, அவர்களது அரசியல் எதிர்பார்ப்பை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது. இராணுவக் கெடுபிடிகள் இல்லாது இருந்தால் வடக்கின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுகூட சந்தேகத்துக்குரிய விடயமாக இருந்திருக்கும்.
தேர்தல் முடிந்தது. நமது முதல் அமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்தார். வட மாகாணத்தில் எமது முதல் அமைச்சர் ஒரு சாதாரண மனிதனல்ல. ஓய்வு பெற்ற நீதியரசர். தற்பொழுது மாகாண சபை இயங்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இன்னும் சபை முறையாக இயங்கக்கூடிய சூழல் உருவாகவில்லை, முதல் அமைச்சருக்கும் அமைச்சர் சபைக்கும் தேவையான அதிகாரிகள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இன்னும் நியமிக்கப்படவில்லை. பலவித நடைமுறைச் சிக்கல்கள், தேவையற்ற சிக்கல்கள் தற்பொழுது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விடயம் சம்பந்தமாக முதல் அமைச்சர் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு அவற்றை தீர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவை விரைவில் தீர்க்கப்படுமென்று எதிர்பார்க்கின்றோம்.
இந்த மாகாண சபைகள் எவருடைய தயவிலும் இயங்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எதிர்பார்ப்பது தற்பொழுதுள்ள சட்டத்தின் அடிப்படையில் 13 அ. சாசனத்தின் அடிப்படையில் மாகாண சபை சட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும். அந்த ஒழுங்கு எமக்கு ஒரு முழுமையான தீர்வாக அமையாமல் இருக்கலாம். அது விடயம் சம்பந்தமாக நாம் பேசத்தயார். நியாயமான தீர்வை ஏற்படுத்த நாம் தயார். ஆனால், அவ்விதமான ஒரு தீர்வு வரும் வரையில் இந்த மாகாண சபைகள் மக்களின் ஜனநாயக முடிவின் அடிப்படையில் அந்த சட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும். அதை எவராலும் தடுக்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு ஆகும். வடமாகாண சபை இயங்குவதற்கு இடமளிக்கப்படாமல் இருக்குமாக இருந்தால் அதன் விளக்கம் என்னவென்றால் தீவிரவாத அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாகாண சபையினை நடாத்தாமல் இருக்காமல் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக அமைந்த மாகாண சபை. தீவிரவாத சக்திகளின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த மாகாண சபையை இயங்குவதற்கு அரசாங்கம் தற்பொழுது தடையாக இருக்கின்றது. அதன் காரணம் என்னவென்றால் மக்களுடைய ஜனநாயக முடிவு வீசப்பட்டு, நிராகரிக்கப்பட்டு மக்கள் முடிவுக்கு மாறாக தீவிரவாத சக்திகளின் விருப்பத்தின் அடிப்படையில் மத்தியரசாங்கம் செயற்படுகின்றது. இந்த நிலைமை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அவ்விதமாக இந்த நாட்டில் ஆட்சி நடைபெறுமாக இருந்தால் நாட்டில் ஜனநாயகத்துக்கு இந்த நாட்டில் என்ன மதிப்பளிக்கப்படுகின்றது. அப்படியான ஆட்சி நடைபெறுமாக இருந்தால் சிறுபான்மை மக்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. இக்கேள்வியைத்தான் நாம் சர்வதேச சமூகத்திடம் கேட்போம். நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம். இப்பிரச்சினைகளைத் தீர்க்க வடக்கின் முதல் அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இன்னும் இரண்டு நாட்களில் இதற்கு நல்லதொரு முடிவு வராவிட்டால் சர்வதேசத்திடம் இந்தக் கேள்வியை பகிரங்கமாக கேட்க வேண்டிய நிலை ஏற்படும். அதிகாரத்தை இந்த நாட்டில் பெறுவதும் பயன்படுத்துவதும் இலகுவான விடயமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று எமது பிரச்சினை முற்றாக எப்பொழுதும் இல்லாத அளவுக்கு சர்வதேச மயமாக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2012, 2013 ஆம் ஆண்டு இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான விடயங்கள் அமுல் படுத்தப்படவில்லை. நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்தார் வாய் மூலம் ஒரு அறிக்கையை அவர் சமர்ப்பித்து இருக்கின்றார். 2014 ஆம் ஆண்டின் மனித உரிமைப் பேரவை அமர்வில் இந்த விடயம் எடுபடவிருக்கின்றது. ஆலோசிக்கப்படும் சில முடிவுகள் எடுக்கப்படும்.
பொறுப்புக்கூறும் விடயம் சம்பந்தமாக இலங்கையரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இதுவரை ஈடுபடவில்லை. பொறுப்புக்கூறும் விடயம் சம்பந்தமாக இலங்கையரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கா விட்டால், செயற்படாதுவிட்டால் ஒரு சர்வதேச விசாரணை தவிர்க்கப்பட முடியாத ஒருவிடயமாக மாறும் என்ற கருத்து பகிரங்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. சபையின் அதிகாரிகள் யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் இறுதிக் காலத்தில் தங்கள் ஆணையை முறையாகப் பயன்படுத்தவில்லை. மனிதாபிமான மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான ஆணையை தாம் முழுமையாக பயன்படுத்தவில்லையென்பது அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றமாகும். வேறு எவராலுமில்லை. ஐ.நா. சபையின் உள்ளேயிருந்து அந்தக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. அது விடயம் சம்பந்தமாக தற்பொழுது விசாரணை நடைபெற்று அக்கருத்தை ஏற்றுக்கொண்ட ஒரு அறிக்கை வெளிவந்திருக்கின்றது.
அது விடயமாகத்தான் எவ்விதமாக செயற்பட வேண்டுமென்பதை அறிவதற்காக செயலாளர் நாயகம் இன்னுமொரு குழுவை நியமித்திருக்கின்றார். தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக.
இந்த வாரம் இலங்கைக்கு ஒரு அமெரிக்கத் தூதுக்குழு விஜயம் செய்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, (06-12-2013) அவர்கள் திருமலைக்கு வந்திருந்தார்கள். நானும் சந்தித்தேன். பொதுநலவாய மாநாடு நடைபெற்றது. பல தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெளிவாகக் கூறியிருந்தார்கள். பாரதப் பிரதமர் எதிர்ப்பின் காரணமாக மாநாட்டுக்கு வரவில்லை. இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் சமீபத்தில் கூறியிருக்கிறார் இந்தியா ஒருபோதும் இலங்கைத் தமிழர்களை கைவிடாது. 13ஆவது சாசனம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் கூறியிருக்கிறார்.
இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்துப் பிரதமர் கெமரூன் வட மாகாணத்துக்கு சென்று முதல் அமைச்சரை சந்தித்துள்ளார். நாங்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றினோம்.
இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்தபோது சந்தித்து உரையாடியிருக்கின்றோம். இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர்களையும் சந்தித்து உரையாடினோம். கனடாவிலிருந்து வந்த குழு யாழ். சென்று முதல் அமைச்சரை சந்தித்து இருக்கின்றது. இங்கிலாந்தின் பிரதமர் கூறியிருக்கின்றார். எதிர்வரும் வருடம் பங்குனி மாதத்துக்கு முன்பாக இலங்கையில் நம்பத்தக்க விசாரணை நடைபெறாவிட்டால் ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டுமென்று கூறியிருக்கின்றார். அது விடயம் சம்பந்தமாக நாங்கள் முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா வந்திருந்தார். இலங்கையரசு தென்னாபிரிக்காவின் உதவியை அவரிடம் கோரியிருந்தது. அவர்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் உதவும் படியாக ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவ்விதமான செய்தியை ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டிருக்கின்றது. தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியை நாங்களும் சந்தித்தோம். திருப்தியான பேச்சுவார்த்தை எங்களுக்கிடையில் நடைபெற்றது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணுவதற்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். அது விடயம் சம்பந்தமாக எமது கருத்தை அறிய விரும்பினார்கள். அவர்களுக்கு நாம் கூறினோம் உங்களது பங்களிப்பு பரிபூரணமான பங்களிப்பாக இருக்க வேண்டும். மோதல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அறியப்பட வேண்டும். தற்போது நமது பிரதேசங்களில் நடைபெறும் கெடுபிடிகள் இல்லாமல் செய்ய வேண்டும். மாற்றியமைக்கப்பட வேண்டும். விசேடமாக காணி, இராணுவ மயமாக்கல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும். எங்கள் மக்களின் காணிகள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
பொறுப்புக்கூறும் விடயத்தில் உண்மை அறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் தீர்வு ஏற்பட வேண்டும். நாம் ஏற்றுக்கொண்ட தீர்வு நிரந்தரமான தீர்வாக இருக்க வேண்டும். அது முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு சர்வதேச உத்தரவாதம் இருக்க வேண்டும். இவ்விதமான முழுமையான முயற்சியில் தாங்கள் ஈடுபடுவதாக இருந்தால் அதை நாம் வரவேற்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால்? இலங்கை அரசாங்கம் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக அவர்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதாக இருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக்கூறியிருந்தோம்.
0 Comments