Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தியது இலங்கை - இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு

அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கைக்கு பணிந்து ஈரானிடம் இரகசியமாக எண்ணெய் கொள்வனவு செய்வதை இலங்கை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக, ஈரானிய எண்ணெயை இலங்கை கொள்வனவு செய்து வந்தது. இதுபற்றிய புலனாய்வுத் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்ததை அடுத்து, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அலரி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியை கையளித்திருந்தார்.

அச்செய்தியில், ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிடின் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், ஈரானிய எண்ணெயை மட்டும் சுத்திகரிக்கும் வசதியைக் கொண்டுள்ள, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளதுடன், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் 19ம் மற்றும், 27ம் நாள்களில் இலங்கைக்குப் புறப்படவிருந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்களை இலங்கை நிராகரித்துள்ளது.
இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வரவேண்டிய 180 ஆயிரம் மெட்றிக் தொன் எண்ணெய் ஏற்றிய கப்பல் தொழில்நுட்பக் கோளாறினால், கொழும்பு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலையை மூன்று நாட்கள் மூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட தாமதமே சுத்திகரிப்பு நிலையத்தை திடீரென மூடக் காரணம் என பெற்றோலிய வள அமைச்சர் அனுரபிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். 20 நாட்களுக்கு முன்னதாகவே மசகு எண்ணெய் கப்பலொன்று இலங்கைக்கு வரவிருந்த போதிலும், குறித்த கப்பலின் வருகை தாமதமானதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெற்றோலியவளத் திணைக்களத்தில் நிலவி வரும் ஊழல் மோசடிகளினால் இவ்வாறு அடிக்கடி சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டியிருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

Post a Comment

0 Comments