Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் மாவீரர் தின துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதால் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் கடும் தாக்குதல்

தமிழினத்திற்காக தங்களது உயிரையும் பெரிதாக மதிக்காது தியாகங்களை செய்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும் என்று வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தினைக் காட்டி, அப்பாவி மக்கள் மீது இராணுவத்தனர் தாக்குதல் நடத்திய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை மயிலம்பாவெளி முருகன் கோயிலுக்கு முன்பாக ஒட்டப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தினை தமது கைகளிலே எடுத்த இலங்கை இராணுவத்தினர், அவ்வீதியால் சென்ற மக்களை பெரிய தடிகள் கொண்டும், கூரிய ஆயுதங்கள் கொண்டும் தாக்கியுள்ளனர். அதிகாலை வேளையில் லொறியில் கல் ஏற்றிவந்தவர்களை வாகனத்தில் இருந்து கீழ் இறக்கி அவர்களை தடிகளினால் தாக்கியது மாத்திரமல்ல இவர்களுடன், சேர்த்து வீதியால் வந்தவர்களையும் ஆலய நிருவாகத்தினரையும் மூன்று மணித்தியாலங்களாக முழங்காலில் வைத்து தண்டனை கொடுத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
(அடித்து முழங்காலில் வைத்தது தொடர்பாக) இந்தச் சம்பவம் தொடர்பாக யாரிடமும் தெரியப்படுத்தினால் இதைவிட மோசமான தண்டனையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் இவ்வாறான துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவோருக்கு எதிராக பாரிய தண்டனைகள் வழங்கவேண்டி ஏற்படும் என மிரட்டியதாகவும் அறியக்கிடைக்கின்றது.
நாளைய தினம் மாவீரர்களின் நினைவு நாள் என்ற காரணத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பலபகுதிகளிலும் (தன்னாமுனை மயிலம்பாவெளி, கல்லடி, ஊறணி, இருதயபுரம், படுவாங்கரையின் பலபகுதிகளிலும்) இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது, யுத்தகாலத்தில் இருந்ததைப் போன்ற தோற்றப்பாட்டினை அவதானிக்க முடிந்தது.

Post a Comment

0 Comments