சென்னை, அக்.26 (டி.என்.எஸ்) ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம் ரூ.1,702 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால் அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்கள் அணிக்கான ஆண்டு கட்டணத்தை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று புனே வாரியர்ஸ் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது.
இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இதனால் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கு முன்பு இந்திய அணியின் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்தும், புனே வாரியர்ஸ் உரிமையாளர் அந்தஸ்தில் இருந்தும் விலகி கொள்வதாக சகாரா குழும உரிமையாளர் சுபத்ராராய் அறிவித்தார்.
இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு இறுதி வரை இந்திய அணிக்கு சகாரா நிறுவனம் ஸ்பான்சர் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. புனே வாரியர்ஸ் பிரச்சினையை தீர்ப்பாயத்தில் தீர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இன்னும் தீர்ப்பாய விசாரணை தொடங்கப்படவில்லை. ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தொடர ரூ.170.2 கோடியை வங்கி உத்தரவாத தொகையாக கட்ட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இது குறித்து பலமுறை ஞாபகப்படுத்தியும் சகாரா நிறுவனம் இந்த தொகையை கட்டவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு மே 21–ந் தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக அந்த அணியின் உரிமையாளர் சுபத்ரா ராய் அறிவித்தார்.
ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி கடிதம் அனுப்பவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் புனே வாரியர்ஸ் அணிக்கு நோட்டீசு அனுப்பி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது
0 Comments