மட்டு. வீடொன்றில் இருந்து 16க்கும் அதிகமான முதலைக் குஞ்சுகள் மீட்பு (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட அமிர்தகழி பிரதேசத்தில் 16க்கும் மேற்பட்ட முதலைக் குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன.
அமிர்தகழி, ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள மனோகரன் என்பவரின் வீட்டின் காணியில் இருந்தே இந்த முதலைக் குஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமது காணிக்குள் துப்புரவு வேலை செய்துகொண்டிருக்கும்போது முதலை குஞ்சு ஒன்றின் தலை தெரிவதைக்கண்டு அப்பகுதியை தோண்டியுள்ளனர்.
அப்போது இறந்த நிலையில் ஒரு முதலைக் குஞ்சினையும் பத்துக்கும் மேற்பட்ட முதலைக் குஞ்சுகளை உயிருடனும் 15க்கும் மேற்பட்ட முட்டைகளையும் மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முட்டைகளில் இருந்து முதலைக் குஞ்சுகள் வெளிவந்த நிலையில் 16க்கும் மேற்பட்ட முதலைக் குஞ்சுகள் தற்போது உயிருடன் மீட்கப்பட்டதுடன் குஞ்சு பொரிக்கும் நிலையில் 09 முட்டைகளும் உள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் அவற்றினை கொண்டுசென்றுள்ளனர்.
மக்கள் அதிகமாகவுள்ள இப்பிரதேசத்துக்கு நீண்ட தூரத்தில் நீர்நிலைகள் இல்லாத நிலையில், முதலை முட்டைகள் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் ஆச்சரியம் தெரிவித்தனர்.
இந்த முதலைக் குஞ்சுகளை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் குறித்த வீட்டுக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments