Advertisement

Responsive Advertisement

விக்னேஸ்வரன் இன்றைய அன்ரன் பாலசிங்கம்!

விக்னேஸ்வரன் இன்றைய அன்ரன் பாலசிங்கம்!
வடக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இன்றைய அன்ரன் பாலசிங்கம் என அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
புத்திசாலித்தனமான நுணுக்கங்களை கொண்டு தென் பகுதி மக்களை ஏமாற்றி வரும் அவர், வடபகுதி மக்களை ஈழத்தை நோக்கி வழி நடத்தி வருகிறார் என அந்த கட்சியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள ஊடகங்களில் ஐக்கியம், நல்லிணக்கத்தை பற்றி பேசும் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களில் சுயாட்சி, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி பேசி பிரபாகரனை வழிபாடு செய்கிறார்.
விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் இதே வழியையே பின்பற்றினார். அவர் தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு சமாதானம் பற்றி கூறியதுடன் நயினாதீவுக்கு யாத்திரை வருமாறும் குறிப்பிட்டார்.
பாலசிங்கம் சட்டரீதியாக ஈழத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் அதற்கான விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை முன்னெடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் தென் பகுதி மக்களை ஆழ்ந்த நித்திரையில் வைத்து விட்டு தமது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதே விக்னேஸ்வரனின் திட்டமாகும்.
பிரபாகரன் ஆயுதத்தினால் தனது நோக்கத்தை அடைய முடியும் என நம்பினார். அவரது நோக்கம் அழிக்கப்பட்டது. ஆனால் அழிக்கப்பட்ட அந்த நோக்கத்தை முன்னெடுத்து பிரிவினைக்கான முனைப்புகளை விக்னேஸ்வரன் இன்று மேற்கொண்டு வருகிறார்.
புத்திசாலித்தனமாக வேலை செய்து, மேற்குலம் மற்றும் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தனது சதித்திட்டத்திற்கான நகர்வுகளை விக்னேஸ்வரன் முன்னெடுத்துள்ளார் என்றார்.

Post a Comment

0 Comments