Home » » மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு வந்தாறுமுலை கணேச வித்தியாலயத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.


பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி அபிவிருத்தி செய்யப்படுவது மிக அத்தியாவசிய ஒன்றாகவே காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு நாட்டை சுபீட்சத்தில் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைவாக அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியிலும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு அமைவாகவே எனது வேண்டுகோளின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

விரைவில் பாடசாலைகளில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுகள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்று தருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை அதிகரிக்கும் நோக்கில் 9 பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டன. மிக நீண்ட காலமாக தரம் உயர்த்தப்படாமல் இருந்த பாடசாலைகள் தற்போது உள்ள அரசாங்கத்தின் முயற்சியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்னும் பல பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவுகளை கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளோம். விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாடசாலைகள் தரம் உயர்த்தப்படும் மற்றும் பாடசாலைகளில் காணப்படுகின்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் அத்துடன் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக மிக விரைவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை உள் வாங்குவதற்கான முன்மொழிவுகளை கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. மாணவர்கள் மத்தியில் covid-19 தொற்றிலிருந்து முழுமையாக பின்பற்றவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு பாரிய திட்டங்களை முன்னெடுத்து மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பாரிய கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்தும் நாட்டில் இடம்பெற்ற covid-19 தொற்றின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாரிய மன அழுத்தங்களுக்கு மத்தியில் உள்ள மாணவர்களை கல்வி சூழலுக்குள் கொண்டு வருவதற்கான பல வேலைத்திட்டங்களை உள்வாங்கியுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |