கல்முனை பிரதேசத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த திருமணமாகாத 8பேர் ஐஸ், மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் பிடி படாமலிருக்க, மந்திரத் தகடுகளும், மந்திர வாதியின் பெரிய போட்டோக்களும், அரசியல்வாதிகளின் போட்டோக்களும் வைத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹெரோயின் போதை மாத்திரை போன்ற போதைப்பொருட்களை சூட்சுமமாக நீண்ட காலமாக வாடகை வீடு ஒன்றினை பெற்று விற்பனை செய்து வந்த 8 பேர் கொண்ட குழு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த 8 பேர் இன்று (27) மாலை கல்முனை விசேட பிரிவிற்கு நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவர்கள் கைதாகினர்.
இதன்போது கைத்தொலைபேசி -14 , இரகசியக் கெமரா -1, ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகள், பொலிஸாரை மந்திரத்தினால் வசியப்படுத்தும் விபரங்கள் அடங்கிய தாள்கள், வங்கி சிட்டைகள், வங்கி அட்டைகள், கணனி விசைப்பலகை, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான உலகப் படத்தொகுதி, கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட வங்கி காசோலைகள் , கடிதங்கள் , இலங்கை புகழ் பெற்ற அரசியல் வாதிகளின் பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்கள்,சார்ஜ்சர்கள்,சீசா என்றழைக்கப்படும் போதைப்பொருளை நுகர பயன்படுத்தும் உபகரணம், லப்டெப் -2, வன்பொருள் -1, என்பன மீட்கப்பட்டதுடன் சுமார் 27 முதல் 40 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத 8 சந்தேக நபர்கள் கைதாகினர்.
இதில் கைதான ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுக்காக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதாகிய 8 பேரையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.
கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments: