( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவுர் மற்றும் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட வயல் நிலங்களில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான காட்டு யானைகள் படையெடுப்பதால் இப்பிரதேச விவசாயிகள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.சிறுபோக விவசாயத்திற்காக வயல் நிலங்களை தயார் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் காலை வேளைகளில் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாதவாறு வயல் நிலங்கள் முழுவதையுமே காட்டு யானைகள் ஆக்கிரமித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இரவு வேளைகளில் வயல் நிலங்களுக்குள் உட் பிரவேசிக்கும் காட்டு யானைகள் விவசாயிகள் இளைப்பாறுவதற்காக அமைத்துள்ள ஓய்வு அரண்களையும் ( பறன் ) , வயல் ஓரங்களில் காணப்படும் நிழல்தரும் மரங்களையும் சாய்த்து
அழித்துள்ளன.
சிறு போக வேளாண்மைச் செய்கைக்காக வயல் நிலங்களை உழும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தமது உழும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் வீடு திரும்ப முடியாத நிலமையொன்று ஏற்பட்டுள்ளதுடன் இரவு வேளைகளில் காட்டு யானைகள் பகல் வேளையில் தயார் படுத்தப்பட்டுள்ள வரம்புகளையும் , அணைக்கட்டுகளையும் காலால் மிதித்து சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகளுக்கு மேலதிகமான வேலையும் , வீணான செலவுகளும் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
0 comments: