Home » » கல்முனை தமிழ்ப்பிரிவில் குறுந்திரைப்படத்தின் முன்னோடி பல்துறைக்கலைஞர் அகரம் செ.துஜியந்தனின் பார்வை குறுந்திரைப்படம் விருதுக்கு தெரிவு

கல்முனை தமிழ்ப்பிரிவில் குறுந்திரைப்படத்தின் முன்னோடி பல்துறைக்கலைஞர் அகரம் செ.துஜியந்தனின் பார்வை குறுந்திரைப்படம் விருதுக்கு தெரிவு



கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் தமிழ் இலக்கிய விழாவில் வாழ்நாள் சாதனையாளர்,; வித்தகர், இளங்கலைஞர் விருதுகள் மற்றும் சிறந்த நூல், சிறந்த குறுந்திரைப்படங்கள் போன்றவற்றிற்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுவருகின்றன. 2020 இல் கௌரவிக்கப்படவுள்ள கலைஞர்களின் விபரங்களை கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதில் பாண்டிருப்புக் கிராமத்தைச்சேர்ந்த இளங்கலைஞர் அகரம் செ.துஜியந்தனின் பார்வை குறுந்திரைப்படம் சிறந்த படைப்புக்கான குறுந்திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. பல்வகை கலைகளை ஆற்றுப்படுத்தும் திறன் கொண்ட பல்சுவைக் கலைஞராக அகரம் செ.துஜியந்தன் திகழ்கின்றார். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாண்டிருப்புக் கிராமத்தில் இவர் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆறு வயது முதல் கலைத்துறையில் ஈடுபாடுகாட்டிவருகின்றார். ஓரங்க நாடகம், நாடகம், நடிப்பு, நகைச்சுவை, பாடல், பாடல் ஆக்கம், அறிவிப்பு, கவிதை, சிறுகதை, கட்டுரை, ஊடகம், சொற்பொழிவு, பட்டிமன்றம், குறுந்திரைப்படம், சிற்றிதழ் வெளியீடு போன்ற துறைகளில் இன்று வரை சளையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

கல்முனை தமிழ்ப்பிரிவில் முதன் முதலில் பத்து வருடங்களுக்கு முன்பு விமோசனம் எனும்  குறுந்திரைந்திரைப்படத்தினை தயாரித்து. இயக்கி, நடித்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம்  இப்பகுதியில் குறுந்திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்ட முன்னோடியாக அகரம் செ.துஜியந்தன் இருக்கின்றார்.

இதுவரை இவரின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் விமோசனம், விரட்டியடி, பாழாய்ப்போன பயணம், வட்டி, யார் பிச்சைக்காரன், பார்வை, வெறுஞ்சோறு ஆகிய குறுந்திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் விரட்டியடி குறுந்திரைப்படம் 2013 ஆம் ஆண்டு கிழக்குமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் நடத்திய குறுந்திரைப்படப்போட்டியில் முதலாம் இடம்பெற்று 50 அயிரம் பணப்பரிசு, விருது ஆகியவற்றைப்பெற்றது. 

அத்துடன் பாழாய்ப்போன பயணம் குறுந்திரைப்படம் 2015 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது. வட்டி, பாழாய்ப்போன பயணம் ஆகிய திரைப்படங்கள் நோர்வே தமிழ்ச்சங்கம் நடத்திய குறுந்திரைப்படப்போட்டியில் கலந்து கொண்டு நான்காம், ஐந்தாம், இடங்களைப் பெற்றிருந்தது.

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் அகரம் செ.துஜியந்தன் ஊடகத்துறையில் 2012ஆம், 2013 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் சிறந்த சமூக அபிவிருத்திச் செய்தியாளருக்கான விருதினைப்பெற்றுள்ளார். அத்துடன் இளங்கலைஞர், கலைஞர் சுவதம், தேசகீர்த்தி, கலைமாமணி ஆகிய விருதுகளையும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கைகளினால் கலைஞர் கௌரவம் உட்பட இன்னும் பல விருதுகளை தனதாக்கியுள்ளார். 

இவர் விருந்து என்னும்; சிற்றிதழின் ஆசிரியராக செயற்பட்டுவருவதுடன் சமாதான நீதிவான், இந்துப்பிரசாரகர், அகரம் சமூக அமைப்பின் நிறுவுனர் ஆகவும் இருந்து பல்வேறு சமய, சமூகப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |