Home » » சற்று முன்னர் மேலும் நான்கு பேர் கொரோனாவால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு!!

சற்று முன்னர் மேலும் நான்கு பேர் கொரோனாவால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு!!

 


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, ராஜகிரிய பிரதேச முதியோர் இல்லத்தில் வசித்த 51 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான மிக அண்மித்த காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சடலம் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவந்த மேலும் 657 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில், பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 356 பேர் 13 மாவட்டங்களில் இருந்து நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் 193 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 99 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, களுத்தறை மாவட்டத்தில் இருந்து 28 பேர், குருநாகலில் இருந்து 04 பேர், இரத்தினபுரியிலிருந்து 08 பேர் மற்றும் கண்டியிலிருந்து 07 பேரும் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனைப் பகுதியிலிருந்து ஆறு பேர் மற்றும் காலி மாவட்டத்திலிருந்து 02 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து மூவரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அனுராதபும், புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா ஒருவர் வீதமும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தேசிய செயலணி தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 460 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன் குறித்து கண்காணிக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக காணப்படுகிறது.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஆறு லட்சத்து 10 ஆயிரத்து 836 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 38 பேர் இன்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் 64 ஆயிரத்து 75 பேர், இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில், இரண்டாயிரத்து 362 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 ஆயிரத்து 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 493 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |