வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா நாளை(21) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
கொடியேற்றம் இடம்பெற்று 15 நாள் திருவிழாவின் பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் விழா நிறைவடையவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயங்களின் திருவிழா, பக்தர்களின் வருகை என்பன மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உகந்தைமலை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இவ்வருட கொடியேற்ற திருவிழா நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது. இம்முறை ஆடிவேல் விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன் நடாத்த ஆரம்ப குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்னதானம், பாதயாத்திரை என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன. பகல் திருவிழா காலை 7மணி முதலும் இரவு திருவிழா மாலை 5மணி முதலும் நடைபெறவுள்ளன. திருவிழா உபயகாரர்கள் 50 பேர் வரை இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். திருவிழா காலங்களில் ஏனைய பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதியில்லை.
0 comments: