Home » » மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தினை மீண்டும் திறப்பதற்கான முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல மாவட்டங்கள் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது.
இந்தநிலையிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வருகின்ற ஜுன் மாதத்தில் மீண்டும் திறக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

எனினும், மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால், நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
எனினும் தற்போது நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விமான சேவைகளையும் வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்ற காரணிகளை நாம் முன்வைத்துள்ளோம்.
மீண்டும் விமான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் பேசி ஒரு தீர்மானம் எடுக்கவுள்ளது.
எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதற்கமைய இப்போதிருந்து விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகளை கண்காணிக்கும் மருத்துவ இயந்திரங்களை பொருத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் இலங்கை பயணிகள் அதேபோல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் என சகலருக்கும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்தும் விமான பயணங்களில் சில மாற்று நேர அட்டவணைகளை கையாளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |