நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை அறிக்கை தவறாக வழங்கப்பட்டுள்ளமை குறித்து பூரண விசாரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயதிலகவிடம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரி இந்த அவசர கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது.
இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷின் கையொப்பத்துடன் இந்த முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பட்டுள்ளது.
இந்த தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் குறித்த இரகசிய அறிக்கை ஒன்றும் ஜனாதிபதிக்கு தம்மால் அனுப்பட்டதாகவும், அதற்கான எந்த எதிர் நடவடிக்கைகளையும் காண முடியவில்லை எனவும் மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் கேசரியிடம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆய்வு கூடங்களில் போதிய வசதிகள் இருந்தும், தமது பொறுப்பில் இல்லாத ஆய்வு கூடங்களுக்கு பி.சி.ஆர். நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளித்தன் விளைவே இது என அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது. தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையின் தாதி, கொலன்னாவை - சாலமுல்ல மற்றும் ராஜகிரிய பண்டாரநாயக்கபுர, மோதரை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த அறிக்கைகள் குறித்து நாம், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பரிசோதனை மையங்களில் ஆய்வு செய்த போது, கொரோனா உள்ளதாக கூறி கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தவறானவை என கண்டறியப்பட்டது.
ஏற்கனவே எமது கண்காணிப்புக்கு உட்பட்ட விடயம் தான், ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடம் ஊடாக 8 தவறான அறிக்கைகள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்தினால் வழங்கப்பட்ட அந்த 4 அறிக்கைகள் கூட தவறானது என உறுதியாகியுள்ளது.
அதேபோல் கொத்தலாவை பாதுகாப்பு பல்கலையினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை கூட தவறானது என்பது உறுதியாகியது.
அதன்படி 13 தவறான மருத்துவ அறிக்கைகள் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளன. இதனால் மக்களுக்கு மருத்துவ ஆய்வு அறிக்கைகள், மருத்துவ பரிசோதனையாளர்கள் தொடர்பிலான நம்பிக்கையில் கேள்வி எழுந்துள்ளது.' என்றார்.
இதன்போது முகத்துவாரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்ட கொரோனாவால் உயிரிழந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெண் தொடர்பில் கேசரி ரவி குமுதேஷிடம் வினவியது, கொழும்பு பல்கலைக்கழகத்தால் வழங்க்கப்பட்ட 4 அறிக்கைகள் தவறு என கூறுகின்றீர்கள்.
சுகதார சேவைகள் பணிப்பாளர், மறுநாள் அதனை மையப்படுத்தி பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த மூவரின் பெயரை நீக்கியதாக அறிவித்தார். எனினும் மரணமடைந்த பெண்ணின் பெயர் அப்பட்டியலில் இருந்து நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: