Home » » மக்கள் கொரோனா அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் ; இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்று நாட்டுக்கு அவசியமில்லை - ஏ.எல்.எம். அதாஉல்லா.

மக்கள் கொரோனா அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் ; இப்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்று நாட்டுக்கு அவசியமில்லை - ஏ.எல்.எம். அதாஉல்லா.



நூருல் ஹுதா உமர்

தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் ஒன்றை நோக்கி நகர முன்னர் வாக்களித்த மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டியது கடமையாக இருக்கிறது என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

கிழக்கு வாசலில் நடைபெற்ற அரசியல் சார் கலந்துரையாடலில் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கட்சி பிரதானிகள் கூட்டம் தொடர்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தேர்தல் திகதி, பாராளுமன்ற அமர்வுத்திகதி என்பன அறிவிக்கப்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இந்த காலப்பகுதி அமைந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் கூட்டப்பட்ட கட்சி பிரதானிகள் கூட்டத்தில் நாங்கள் இதுவிடயமாக பேசவேண்டிய நிலை வந்தது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் சில அரசியல் கட்சிகள் தேர்தலை பிற்போட வேண்டும் என்றும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிலர் அரசின் நிவாரணங்களை பற்றி பேசினர். அப்போது நாங்கள் நாட்டு மக்களின் தேவைகளையும் நாட்டின் நிலையையும் தெளிவாக அங்கு முன்வைத்தோம்.

நாட்டு மக்கள்தான் இறைமை உடையவர்கள். இறையாண்மை உடையவர்கள் மக்கள். மக்களுக்காகவே தான் தேர்தல், பாராளுமன்றம், அரசியல், தேர்தல் ஆணையம் எல்லாமே. இப்போதைய சூழ்நிலையில் மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயாராக இல்லை. மக்கள் கொரோனா அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள். 21 நாட்கள் தனிப்படுத்தப்படுவோமோ அல்லது இறந்து விடுவோமோ என மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்.

தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் ஒன்றை நோக்கி நகர முன்னர் வாக்களித்த மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

இப்போது இருக்கின்ற தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கடந்த கால தீர்மானங்களும், அவரின் செயற்பாடுகளும் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஆணைக்குழுவில் இருப்போர் எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களை நம்புகிறோம். அதே போன்று நீதிமன்றங்களையும் நாங்கள் நம்புகிறோம்.

இனங்களினதும், அரசியல் கட்சிகளினதும் அபிலாஷைகளுக்கு அப்பால் நாட்டுக்கு தேவையான நல்ல விடயம் எது தேவையோ அதை நாங்கள் சரியாக ஒழுங்குபடுத்தி செய்ய விரும்புகிறோம். ஆனால் தேர்தல் நடைபெற இரண்டு மூன்று மாதங்கள் கடந்து விடுமோ அல்லது நாங்கள் ஓய்வு பெற முன்னர் தேர்தல் நடந்து விடுமோ என இப்போது சிலர் பேசுகிறார்கள். ஜனாதிபதி பொதுத்தேர்தலை பிரகடனம் செய்த போதே கொரோனா விவகாரமும் பிரகடனம் செய்யப்படுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிழையான காரியமாக வேட்புமனுத்தாக்களை நீங்கள் கோரினீர்கள். இன்று கொரோனா இருப்பது போன்றுதான் அன்றும் கொரோனா இருந்தது வேட்புமனுத்தாக்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் இறுதியம்சத்தையாவது  தள்ளிவைத்திருக்க வேண்டும். நீங்கள் அதனை தள்ளிவைக்காததனால் ஏற்பட்ட குறைபாடுகள் ஏராளம் இருக்கிறது. அதை நான் இங்கு விளக்கவரவில்லை வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது என்று நான் அங்கு கூறினேன்.

அங்கு பேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நாட்களாக இருந்த 17,18,19 ஆகிய தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பொதுவிடுமுறை நாளாக அறிவித்ததால் அது சிக்கலாக மாறியுள்ளது என்றார். அதனை தொடர்ந்து ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இப்படியான விடயங்களை பேசினார்கள்.

நாங்கள் எல்லோரும் முகத்தை மூடிக்கொண்டு இருக்கிறோம் எங்கு பயங்கரவாதிகள் வருவார்கள், எங்கு சிக்கல்கள் வரும் என்றெல்லாம் தெரியாது. பொதுவாகவே தேர்தல்களை நடத்துவதில் பாதுகாப்பு பிரச்சினைகளும் இருக்கிறது என்பதை கூறினேன். அது உண்மையான விடயம் அது பற்றி நாங்களும் ஆலோசித்து வருகிறோம் என்று ஏற்றுக்கொண்டார்கள். இருந்தாலும் அரசியல் யாப்பு ரீதியான முரண்பாடுகள் இங்கு நிறைய பேசப்படுகிறது. அது நீதிமன்றங்களுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.

அரசாங்கங்களும், தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் வரலாற்றையும், மக்களையும் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களும் இது பற்றி கரிசனை செலுத்த வேண்டும். "எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம்" என யாரும் எண்ணாத அளவுக்கு நிலை இப்போது மாற்றப்பட்டுள்ளது. கொரோனா சிறிய வைரஸாக இருந்தாலும் உலக மக்கள் அதில் சிக்கி பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்கள். மருந்து கூட கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்த காலகட்டத்தில் அரசியல் செய்வது, தேர்தல் நடாத்துவது, பாராளுமன்றம் செல்ல ஆசைப்படுவது, அமைச்சுக்கள் பெற முந்தியடிப்பது போன்ற சிந்தனைகள் வரக்கூடாது- என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |