மன்னாரில்...
மன்னாரில் ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் மன்னார் நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 8ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட மன்னார், தாராபுரம் கிராமம் கடந்த 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இன்றைய தினம் மன்னார் நகரிற்கு வருகை தந்து தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
வழமையை விட இன்றைய தினம் அதிகளவான மக்கள் மன்னாரிற்குள் வருகை தந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மன்னார் செய்தி - ஆஸிக்
திருகோணமலை...
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து திருகோணமலையில் மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக திருகோணமலை பொதுச் சந்தையில் மக்கள் முக கவசம் அணிந்து சென்று பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகளிலும் பொது மக்கள் சமூக இடைவெளியை பேணியிருந்தனர்.
இருந்த போதிலும் சுகாதாரத்தை பேணுமாறு பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரும் மக்களை தெளிவுபடுத்தியிருந்தனர்.
இதேவேளை திருகோணமலை நகர பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் திருகோணமலை தலைமையக போக்குவரத்து பொலிஸார் அதனை சீராக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை செய்தி - முபாரக்
கிளிநொச்சியில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை பொலிஸ் ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி செய்தி - யது
வவுனியாவில்..
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பத்து மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காகவும், வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
மேலும் வவுனியா பஜார் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார்சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்தியாலயம், வவுனியா - கண்டி வீதி தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நகரில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதாக தெரியவருகிறது.
வவுனியா செய்தி - திலீபன்
0 comments: