கொரோனா வைரஸ் பாதிப்பை எவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தாயொருவர் வைத்தியசாலையிலிருந்து காணொளி மூலமாக எச்சரித்துள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 வயது Tara Jane Langston என்பவரே இவ்வாறு காணொளி வெளியிட்டு பொது மக்களை விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா அறிகுறிகளோடு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளானார் என உறுதி செய்யப்பட்டது.
மூச்சுவிட திணறிய அவர், கடுமையான இருமலாலும் பாதிக்கப்பட்டிருந்தார். தமது அப்போதைய நிலையை காணொளியாக பதிவு செய்த அவர் தனது சக நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான அவர் தற்போது கொரோனா வியாதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
புகைப்பிடிப்பவர்கள் எவரேனும் இருந்தால் கண்டிப்பாக விட்டுவிடுங்கள் என கூறும் அவர், உங்கள் நுரையீரல் பத்திரமாக இருந்தால் இந்த வியாதியில் இருந்து தப்பலாம் என்றார்.
உடல் முழுவதும் கடுமையான வலி இருந்ததாகவும், மூச்சுவிட திணறியதாகவும் கூறியுள்ள அவர், உடனடியாக மருத்துவமனை அவசர பிரிவுக்கு அழைத்து ஆலோசனை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: