கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று (25.03.2020) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை,மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் நெரிசலாக கூடுவதை தவிர்க்கும் நோக்கில் அனைத்து சில்லறை வியாபார நிலையங்களையும் மூடுவது என்றும் மரக்கரி வியாபாரங்களை மாத்திரம் பிரதேச செயலகத்தினால் தீர்மாணிக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரம் கண்காணிப்புடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வியாபாரங்களில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தேவைக்கு அதிகமாக பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வது மற்றும் வீணாக வீதிகளில் ஒன்று சேர்வதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments: