ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமுக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது, தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அரசாங்கத்தினால் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்கள் முதல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வரை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு அரச ஊழியரும் தமது செயற்பொறுப்பு குறித்த சிறந்த புரிந்துணர்வுடனும், விசேட கவனத்துடனும் எவருக்கும் விசேட கரிசனை காட்டாமலும், பக்கச்சார்பின்றியும் செயலாற்ற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 comments: