கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவில் வாழும் தமிழ் மக்கள் திட்டமிட்டு அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள சிங்கள மக்களும் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது என கல்முனை விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ணதேரர் தெரிவித்தார்.
கடந்தவருடம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட பெரியநீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் கணேஸ் தினேஸின் நினைவாக பெரியநீலாவணை இளைஞர்களினால் பஸ் தரிப்பிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவிக்கையில்,
கல்முனை வாழ் தமிழ் மக்கள் முப்பது வருடகாலமாக ஒரு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்திதருமாறு போராடிவருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு ஏன் இந்த அரசாங்கம் செவிசாய்க்காமல் உள்ளது. தமிழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் பேசாமல் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. நான் கல்முனைக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றது. இங்குள்ள தமிழ் மக்கள் படும் வேதனைகள் பற்றி அறிந்துள்ளேன்.
இந்த நகரம் எந்த இனத்துக்கும் சொந்தமானதல்ல. நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமான இடம் கல்முனையாகும். இங்குவாழும் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக்கி ஆள முற்படக்கூடாது. கல்முனையிலுள்ள ஒரே ஒரு பௌத்த மதத்தலைவன் என்ற வகையில் எல்லோருக்காகவும் குரல் கொடுக்கின்றேன். முஸ்லிம் மக்களினுடைய நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறேன். என்னிடம் இன மத குல பேதம் கிடையாது. இங்கு வாழும் அனைத்து மக்களும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் விடயத்தில் நானும் சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்தேன். அம் மக்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் தட்டிக்கழிக்காது ஏற்றுக்கொண்டு உடன்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக்கொடுக்கவேண்டும் என்றார்.
0 comments: