Home » » ஹிஸ்புல்லாவின் ஆளுனர் பதவியே சஹ்ரான் குழுவினரை பாதுகாத்தது!

ஹிஸ்புல்லாவின் ஆளுனர் பதவியே சஹ்ரான் குழுவினரை பாதுகாத்தது!

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நீக்கப்படாத வரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சரியான உண்மைகளை ஒருபோதும் கண்டு பிடிக்கவே முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களில் ஒருவரும், இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான என். விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.

இவரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது விஷ்ணுகாந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும், குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் காரண காரிய தொடர்புகள் இருப்பதாக பரந்த அளவில் நியாயமான பாரிய சந்தேகங்கள் நின்று நிலவி வருகின்றன. அதற்கு ஏற்றால் போலவே தாக்குதல்களுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் சம்பவங்கள் பல இடம்பெற்று இருக்கின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தாக்குதல்தாரிகளுடன் வெளிப்படையாகவே சம்பந்தப்படுத்தி பேசப்படுகின்றார். எனவே ஆளுனர் பதவியில் இருந்து நீக்கி விட்டு இவரை உடனடியாக விசாரித்தல் வேண்டும். அப்பொழுதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சரியான உண்மைகளை கண்டுபிடிக்க முடியும். இவரை பதவி நீக்கம் செய்யாமல் விசாரணைக்கு உட்படுத்துவதுகூட எந்தவொரு பயனையும் தர மாட்டாது.

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் ரோஹித போகொல்லாகம நீடித்து இருந்திருப்பாரானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க மாட்டாது. ஏனென்றால் சஹ்ரான் குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்பாகவே அடையாளம் காணப்பட்டு அடக்கப்பட்டு இருப்பார்கள்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஹிஸ்புல்லா விரும்பி கேட்டு பெற்று கொண்டதையும் தற்போதைய சூழலில் சந்தேக கண் கொண்டுதான் பார்க்க நேர்ந்து உள்ளது. ஆயினும் அவருக்கு வழங்கப்பட்ட ஆளுனர் பதவி சஹ்ரான் குழுவினருக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்தது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை என்கிற முஸ்லிம் கிராமத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு சில நாட்கள் முன்னதாக சஹ்ரான் குழுவினரால் பரீட்சார்த்தமாக குண்டு வெடிப்பு நடத்தி பார்க்கப்பட்டு இருக்கின்றது. இக்குண்டு வெடிப்பு தொடர்பாக அப்போது உருப்படியான விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தடுக்கப்பட்டு இருக்கும். ரோஹித போகொல்லாகம ஆளுனராக இருந்திருந்தால் நிச்சயம் உரிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டு இருப்பார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான தார்மிக பொறுப்பையேனும் ஆளுனர் ஹிஸ்புல்லா ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டார். இதன் காரணமாக இங்கெல்லாம் பதுங்கி இருக்க கூடிய பயங்கரவாதிகள், பதுக்கி வைக்கப்பட்டு இருக்க கூடிய ஆயுதங்கள் ஆகியவற்றை இப்போது வரை முழுமையாக கண்டு பிடிக்க முடியாமலேயே உள்ளது. இவர் ஆளுனர் பதவியில் இனியும் தொடர்வாரானால் இந்நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கும் என்பதும் திண்ணம் ஆகும்.

ஒரு வகையில் சஹ்ரான் குழுவினருக்கு முன்னுதாரணமாக, முன்னோடியாக ஹிஸ்புல்லா செயற்பட்டு இருக்கின்றார் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அனுபவம் ஆகும். ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை உடைத்து மீன் மார்க்கற் கட்டினார். அதே போல ஓட்டமாவடியில் தமிழர் மயானத்தை கபளீகரம் செய்து பிரதேச செயலகம் நிறுவினார். ஹிஸ்புல்லாவே இவற்றை அவரே செய்ததாக முஸ்லிம் மக்களுக்கு பெருமையுடன் ஒப்புவித்து இருக்கின்றார். இதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு சட்டம் இவர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது அப்பட்டமான அநீதி ஆகும். முஸ்லிம் இளைஞர்களை கொண்டு ஊர்காவல் படையை உருவாக்கி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை பெற்று மாஞ்சோலை, கறுவாக்கேணி , முறாவோடை , சத்துருக்கொண்டான், கிரான்குளம், புதுக்குடியிருப்பு போன்ற தமிழர் கிராமங்களில் தமிழ் மக்களை இலக்கு வைத்து வெறியாட்டம் நடத்திய ஹிஸ்புல்லாவை சஹ்ரானின் அண்ணனாகவே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் அன்றி சிங்களவர்களும் இவர் உடனடியாக ஆளுனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேயாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நிலைமை இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழுவின் பிரதி தலைவராக ஹிஸ்புல்லாவை நியமித்து இருப்பது பாரிய அதிருப்தி அலையையே இம்மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |