Home » » ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறைக்கு பில்லியன் கணக்கில் கொட்டி கொடுக்கிறது சீனா!

ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறைக்கு பில்லியன் கணக்கில் கொட்டி கொடுக்கிறது சீனா!



உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் பாதுகாப்பு துறையின் செயற்பாடுகளுக்காக 2.6 பில்லியன்(260 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ள சீனா இலங்கை பொலிஸ்துறைக்கு 1.5 பில்லியன் பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை வழங்கவும் முன்வந்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிப்பதாக சீன ஜனாதிபதி வலியுறுத்தினார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த சீன ஜனாதிபதி, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும் என்று தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி, அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.
இருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை வலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, பயங்கரவாதத்தை ஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை என தெரிவித்தார்.
அந்த உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்ததுடன், அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சீனக் கடன் உதவிகளால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சீன அன்பளிப்பின் கீழ் பொலனறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அனைத்து சந்தர்ப்பத்திலும் சிறந்த நண்பன் என்ற வகையில் இலங்கை சீனாவுக்கு வழங்கும் ஒத்துழைப்பையும் சீன ஜனாதிபதி பாராட்டினார்.
அதுபோன்று போதைப்பொருள் ஒழிப்புக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி , அந்த சவாலை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கையிடம் காணப்படுவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சீன ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் அமைச்சர்களான தயா கமகே, தலதா அத்துகோறள மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |