கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆயிரத்து 347 குடும்பங்களை சேர்ந்த நான்காயிரத்து 633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
கடும் மழை காரணமாக இரணைமடுகுளத்தின் அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையில், வழமைக்கு மாறாக மூன்றடி வரை வான் பாய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 701 குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 229 குடும்பங்களை சேர்ந்த 858 பேர் பாதுகாப்பான ஏழு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 341 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 119 பேர் ஏழு இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அந்த மக்கள் மூன்று பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சீரற்ற காலநிலையால் இரண்டு வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வான்பாய்கின்றதோடு, வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமையால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் வழமைக்கு மாறாக மூன்றடி வான் பாய்கிறது.
இரணைமடுகுளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு அடி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குளத்திற்கு வருகின்ற நீரின் அளவை விட வெளியேறுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் குறிப்பிடுகின்றனர்.
இருந்த போதிலும் மக்கள் பீதிகொள்ளத் தேவையில்லை என்றும் ஆனாலும் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார்.
36 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளமானது இன்று நாற்பது அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments