Home » » அமைச்சரவைக்குள் 2 கறுப்பு ஆடுகள் கண்டுபிடிப்பு!

அமைச்சரவைக்குள் 2 கறுப்பு ஆடுகள் கண்டுபிடிப்பு!

அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாக ஊடகங்களுக்கு அறிவித்த அமைச்சர்கள் இருவர், யார் என்று இனங்கண்டுள்ளோம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், அவ்விருவரையும் அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

காலி - பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவின் உளவுத்துறையான “றோ” அமைப்பு தன்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது எனத் தெரிவித்ததாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சிலர், ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர். எனினும், அவ்வாறு வெளியாகியிருந்த அந்த விடயம் தொடர்பிலான செய்தியை ஜனாதிபதியும் மறுத்திருந்தார்.
“எனவே, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்துகொண்டு, எதிர்த்தரப்பினருக்கு இலாபத்தை பெற்றுத்தர முயற்சிக்கும் அமைச்சர்கள் யாரெனக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடலில் இருவரின் பெயர்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இவ்வாறான அமைச்சர்களைக் கண்டுபிடித்து அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவதற்கான பொறுப்பும் ஜனாதிபதிக்கு உள்ளது” எனத் தெரிவித்த அவர், “அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்வரவேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.
“அமைச்சரவையில் இடம்பெற்ற விடயங்களை சர்வதேசத்துக்குப் போலியாக எடுத்துரைப்பது பெரும் தவறாகும். எவ்வாறாயினும், இந்த போலிக் கருத்துகளால் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முடியாது. எனவே, 2020 ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெறுவார்” என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |