Home » » யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையில் திடீர் திருப்பம்! மூவர் விடுதலை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையில் திடீர் திருப்பம்! மூவர் விடுதலை


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ். நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ், சுருக்க முறையற்ற விசாரணை முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிலும், மற்றைய மாணவர் விபத்திலும் உயிரிழந்திருந்தார். இதில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடமைக்கு பொறுப்பாக இருந்த முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |