தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.கொக்குவில் மாணவன் தற்கொலை செய்து கொண்டமைக்காக அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார்.
அதேவேளை, இம்மாணவனின் செயல் மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
தமிழ் அரசியல் கைதிகளை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கெக்குவில் மாணவன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமை மிகவும் வருத்தமான செயலாகும்.
எனினும், ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக அரசு தமது நிலைப்பாட்டை மாற்றி பலவீனமான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நாங்கள் தேசிய அரசில் இணைந்து அமைச்சுக்களைப் பெற்றுள்ளமைக்காக எமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவும் கலந்துகொண்டார்.
0 comments: