Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது!

சேலம் அருகே உள்ளது ஆட்டையாம்பட்டி. இங்குள்ள வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் ரவி. லொரி டிரைவர், இவருக்கு தாரணி (வயது 17), கவுசல்யா (வயது 12) மகள்களும், கோவிந்தராஜ் (வயது 14) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் தாரணி வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று காலை இவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பின்னர் மாலையில் தாரணி வீடு திரும்பினார். அப்போது தாரணி வீட்டுக்கு அருகில் வசிக்கும் லோகநாதன் (வயது 22) என்ற வாலிபர் வந்து மறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாரணி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் லோகநாதன், தாரணியின் கையை பிடித்து கொண்டு தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தினார். இதற்கு தாரணி மறுத்தார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.

பின்னர் லோகநாதன் தனது சட்டை பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தாரணியை சரமாரியாக குத்தினார். இதில் தாரணி ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதை பார்த்த லோகநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தாரணி கத்தியால் குத்துப்பட்டதை அறிந்த அவரது தந்தை ரவி மற்றும் உறவினர்களும் அங்கு வந்து தாரணியை அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். இங்கு தாரணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இறந்து விட்டார்.

தாரணி சாகும் முன், அவரது பெற்றோரிடம், என்னை லோகநாதன் திருமணம் செய்ய கூறி வற்புறுத்தினான். நான் மறுத்தேன். இதனால் அவன் என்னை கத்தியால் குத்தி விட்டான் என கூறி உள்ளார். இதுபற்றி தாரணியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி பொலிசில் புகார் செய்தனர். பின்னர் பொலிசார் தாரணியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அறிந்த சேலம் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு ஜி.சுப்புலட்சுமி தனிப்படை அமைத்தார். பொலிசார் தலைமறைவாக இருந்த லோகநாதனை இன்று கைது செய்தனர். இவர் மறைத்து வைத்து இருந்த கத்தியையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது கொலை, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிசாரிடம் லோகநாதன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:–

நான் தாரணியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறேன். ஆனால் தாரணி என்னை விரும்பவில்லை. என் காதல் பற்றி தாரணியிடம் பல முறை தெரிவித்தேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தாரணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். ஆனால் தாரணியின் பெற்றோர் பெண் தர மறுத்து விட்டனர். முதலில் தாரணி பிளஸ்–2 படித்து முடிக்கட்டும். பின்னர் தான் திருமண பேச்சை எடுப்போம் என்று கூறி விட்டனர். இருப்பினும் தாரணியை அடிக்கடி சந்திக்க முயன்று எனது ஆசையை தெரிவிக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. இதனால் கோபம் அடைந்து என்னை திருமணம் செய்து கொள்ள தெரிவிக்க நேற்று தாரணியை சந்தித்தேன்.

அப்போது தாரணி திருமணம் செய்ய மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த நான் எனக்கு கிடைக்காத தாரணி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டேன். பின்னர் தான் தாரணி இறந்து விட்டதை அறிந்து வருந்தினேன். பிறகு பொலிசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு லோகநாதன் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக தெரிகிறது. லோகநாதன் 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். தாரணி கொலை செய்யப்பட்டதை அறிந்த தாரணியுடன் படித்து வரும் மற்ற மாணவிகள் இன்று காலை திரளாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தாரணியின் உடலை பார்த்து சென்றனர். இதுபோல் திரளான உறவினர்களும் வந்து தாரணியின் உடலை பார்த்து சென்றனர்.

தாரணி கொலை குறித்து மாணவிகள் கூறும்போது, வழக்கமாக தாரணியுடன் நிறைய மாணவிகள் வீட்டிற்கு திரும்புவார்கள். ஆனால் நேற்று தாரணி தனியாக வந்துள்ளார். அவருக்கு சற்று முன் மற்ற மாணவிகள் சிலர் சென்றுள்ளனர். இதை லோகநாதன் சாதகமாக்கி கொண்டு தகராறு செய்து கொலை செய்துள்ளான். மற்ற மாணவிகளுடன் தாரணி சென்று இருந்தால் இந்த கொலை நடந்து இருக்காது. கொலைக்காரன் லோகநாதனுக்கு பொலிசார் கடும் தண்டனை பெற்று தர வேண்டும்.

Post a Comment

0 Comments