சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமாதானத்தை கட்டியெழுப்புதல், வறுமையை இல்லாமல் செய்தல் போன்ற துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமாதானத்தை கட்டியெழுப்புதல், வறுமையை இல்லாமல் செய்தல் போன்ற முக்கிய இடைவெளியாக உள்ள துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான காலாண்டு மீளாய்வுக் கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் செயற்படும் சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், நிறுவனங்களின் செயற்பாடுகள் பிரச்சினைகள், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இதில், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்களுக்கான அனுமதி, அவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் முக்கியத்துவம், நிருவாகச செலவுகள், பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்ட பிரதேச, திணைக்கள தலைவர்களது அனுமதி, சிபார்சுகள், பயனாளிகளின் தெரிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. கடந்த வருடத்தில் 1,704.3 மில்லியன் ரூபாய்கள் சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வாழ்வாதாரம், சுகாதாரம், போசனைத்திட்டங்கள், கல்வி, வீடமைப்பு, அனர்த்த சேவைகள், நீர்விநியோகம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான திட்டங்கள், நுண்கடன்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் செலவிடப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தில் 476 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன




0 Comments