ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்றுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
|
இக்கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், "அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கலந்துரையாடினோம். பல்வேறு மட்டங்களில் நாம் ஆராய்ந்தோம். இந்தக் கூட்டத்தில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு முடிவெடுத்துள்ளது. புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினரின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளவுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியே இடம்பெறவுள்ளது. டிசம்பர் மாதம் 8ஆம் திகதியே வேட்புமனுத்தாக்கல் தாக்கல்செய்யும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. ஆகவே, குறித்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு எமக்கு கால அவகாசம் இருக்கின்றது. அது தொடர்பில் அவசரப்படவேண்டிய தேவையில்லை. மிகவும் பக்குவமான அந்தக் கருமங்கள் தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவெடுப்போம். அதற்காக தொடர்ந்தும் எமக்குள்ளே பேச்சுக்களை நடத்தவுள்ளோம்" - என்றார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவிக்கும் கருத்துக்களே உத்தியோகபூர்வமானது என்று நேற்றைய கூட்டத்தில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை சம்பந்தன் எம்.பியே ஊடகங்களுக்குத் தெரிவிப்பார்.
|
0 Comments