கிளாப் போர்டு மூவிஸ் சார்பில் வினாயக் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘மகாபலிபுரம்‘. இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்காக ஆளில்லாத தனித்தீவுக்கு போன படக்குழுவினர் மாலையில் திரும்பி வரும்போது திடீரென சீறி எழுந்த அலைகளால் நடுக்கடலில் மிரண்டு தவித்து உயிர் தப்பியிருக்கிறார்கள்.
நிஜத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து ‘மகாபலிபுரம்’ பட இயக்குனர் டான் சாண்டி கூறும்போது,
தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது ‘மகாபலிபுரம்’. இந்த இடத்தை சுற்றிலும் பல கிராமங்கள் இருக்கிறது. மகாபலிபுரத்தில் அங்கே வசிப்பவர்களும், அந்த இடத்தை சுற்றிப்பார்க்க நமது நாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள். ஒரே இடத்தில் பலதரப்பட்ட மக்களை அங்கே சகஜமாக பார்க்க முடியும். அப்படி வரும் பலதரப்பட்ட மக்களை சுற்றிய கதைதான் ‘மகாபலிபுரம்’ படம்.
5 பேர் இந்த கதையில் வலம் வருகிறார்கள் மகாபலிபுரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமானால் டில்லியில்தான் அனுமதி வாங்க வேண்டும். ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவார்கள். அதையும்தாண்டி அனுமதி வாங்கி முழுப் படப்பிடிப்பையும் மகாபலிபுரத்திலேயே நடத்தியிருக்கிறோம்.
ஒரே ஒரு பாடல் காட்சிக்காக பாங்காங் போனோம். பாங்காங்கை சுற்றிலும் பல குட்டித் தீவுகள் இருக்கிறது. அதில் பல ஆளில்லாத தீவுகள். பகலில் மட்டும் அங்கே ஆட்கள் நடமாடுவார்கள். மாலை நெருங்கியதும் நாம் கரை திரும்பிவிட வேண்டும். அப்படி ஒரு ஆளில்லாத தீவில் பாடல் காட்சியை படமாக்கி முடித்து மாலையில் கரை திரும்ப படக்குழுவினர் அனைவரும் பெரிய படகில் கரைக்கு வந்து கொண்டிருந்தோம்.
நடுக்கடலில் படகு வரும்போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் வழக்கத்தைவிட மிக உயரமாக எழும்பி படகு பயங்கரமாக ஆடியது. படக்குழுவில் இருந்த அனைவருமே பயத்தில் மிரண்டு விட்டோம். கரை திரும்ப முடியுமா? என்பதே சந்தேகமாக இருந்தது. நல்லவேளை எப்படியோ சமாளித்து எந்த சிக்கலும் இல்லாமல் பத்திரமாக கரை திரும்பினோம். படத்தின் கதை ‘மகாபலிபுரத்தில் நடந்த கதைதான். படத்தை முடிக்கும்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவலை சொல்லியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மகாபலிபுரம்’ படம் முழுவதும் த்ரில்லர் கலந்த காமெடி கதை. 46 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார்கள். ‘முகமூடி’, ‘யுத்தம் செய்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கே இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் இசையில் டி.இமான் ஒரு பாடலை பாடுகிறார்.
இப்படத்தின் இயக்குனர் சாண்டி இயக்குனர் பூபதிபாண்டியனிடம் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் கர்ணா, ரமேஷ், வெற்றி, வினாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். விர்த்திகா, அஞ்சனா ராய் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
0 Comments