Home » » அம்பாறையில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்கிராமங்களுக்கு ஏற்பட்ட நிலை- வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்

அம்பாறையில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்கிராமங்களுக்கு ஏற்பட்ட நிலை- வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்

இருந்த இடம் இருந்த தடம் கூட இல்லாமல் அம்பாறை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன.அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் முகமாக குறைவீடுகளை திருத்துவதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த பிரதேசம் தற்பொழுது கல்வியில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த காலங்களில் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி இருந்தாலும் அந்த சவால்களை முறியடித்து இந்தப் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் தங்களது ஆளுமையை வளர்க்க காரணம் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற புத்திஜீவிகளும் இந்தப் பிரதேசத்தின் தவிசாளரும்தான்.
இங்கு இருக்கின்ற முஸ்லிம் மக்களையும் இணைத்து அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். ஆனால் ஏனைய அரசியல்வாதிகள் தங்களது சுயநல அரசியலுக்காக குறிப்பிட்ட மதத்தை அல்லது குறிப்பிட்ட இனத்துக்கு மாத்திரம் அரசியல் செய்து அவர்களுக்கான உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள் ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்தி திட்டம் என்பது மிகவும் மந்தகதியில் இருக்கின்றது. ஒரு பக்கச் சார்பான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த உண்மை கவலைக்குரியது ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன மத மொழி பேதம் அரசியல் பேதம் பார்க்காத உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றோம்.
சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அல்லது முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது அபிவிருத்திக்கான நிதியை தங்களது இனத்துக்காக மாத்திரம் முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு இருக்கின்றது. இருந்த இடம் இருந்த தடம் கூட இல்லாதாக்கப்பட்டுள்ளது.அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது .
நீங்கள் வேற்று சக்திகளுக்காக அரசியல் ரீதியாக செயற்பாடுகளை மேற்கொள்வீர்களானால் மாவட்டத்திலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் இந்த மாவட்டத்து மக்கள் ஆண்டான் அடிமையாக எதிர்காலத்தில் மாறக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அப்படி மாறுதல் தமிழர்களுக்கான சாவு மணி அடிக்கும் சந்தர்ப்பமாகவே மாறும் என்பதை இந்த இடத்தில் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக சர்வதேசத்திலிருந்து பல புலனாய்வுத்துறையினர் உள்வாங்கப்பட்டுள்ளனர் பல கட்சி ஊடாக தமிழர்கள் என்ற பிரதிநிதித்துவத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
வடகிழக்கில் பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சக்தியை உடைக்கவும் உடைக்க வேண்டும் என பல சக்தி சர்வதேச நாடுகளில் இருந்து செயற்படுகின்ற முகவர்கள் மூலம் சில கட்சிகள் மூலம் ஊடுருவல் வாங்கப்பட்டு இங்கே தமிழர்களின் பிரதிநிதித்துவம் உடைப்பதற்காக சதி முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எப்பொழுதும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க பாடு படுகின்றது.
சில அற்ப சலுகைகளை கொடுத்து தமிழர்களை விலை கொடுத்து வாங்கலாம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடக்கில் பெருமளவு நிதியை கொட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கு செலவிட்டார்கள் ஆனால் அங்கு ஒரு உறுப்பினரை கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை பலப்படுத்தினார்கள்.அதேபோல் கிழக்கிலும் தமிழ் தேசியத்தினை பலப்படுத்துவது அந்த நம்பிக்கை இருக்கின்றது என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |