எமது இந்தப் போராட்டத்திற்குச் சரியான முறையான தீர்வு வழங்கப்படவில்லையாயின் எமது போராட்டங்கள் வேறு வேறு வடிவங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் சகல தரப்பினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இடம்பெற்ற வெளிவாரிப் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்ட ஆரம்பிப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பட்டதாரிகளுக்கு வழங்கப்பட இருக்கின்ற நியமனங்களில் வெளிவாரிப் பட்டதாரிகள் உள்வாரிப் பட்டதாரிகள் எனப் பிரிக்கப்பட்டு நியமனங்களின் போது வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடாத்தப்படும் போராட்டமே இது. எமக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தினை ஒவ்வொரு நாளும் சத்தியாக்கிரகப் போராட்டமாக மேற்கொள்ளவுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது போராட்ட இடத்தில் சமூகமளித்து ஒரு சரியான தீர்வினை எமக்கு வழங்கும் உத்தரவாதத்தினைத் தர வேண்டும்.
அதே நேரம் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஐயா அவர்களின் ஊடக அறிக்கையொன்றிலே பத்தாயிரத்து ஐநூறு பட்டதாரிகளுக்கு ஒரு மாதகாலத்துக்குள் வேலை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்த விடயத்தை எமது பட்டதாரிகள் முன் வந்து எந்த அடிப்படையில் அந்த நியமனம் வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றி எமக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவரின் அலுவலகத்திற்குச் செல்வதற்கும் நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
எமது இந்தப் போராட்டத்திற்குச் சரியான முறையான தீர்வு வழங்கப்படவில்லையாயின் எமது போராட்டங்கள் வேறு வேறு வடிவங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் சகல தரப்பினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பமாகியது. பின்னர் பிற்பகல் 02 மணியளவில் பட்டதாரிகள் காந்திப் பூங்காவில் இருந்து நடைபவணியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புக் காரியாலயத்திற்குச் சென்று தங்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டனர். சுமார் 400க்கு மேற்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் நேற்றைய தினம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.
0 comments: