பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் பாதுகாப்புக்காக 7,400 போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 200 பேர்வரை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் 5 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள வரிக் குறைப்புக்களைச் செய்யவுள்ள நிலையில் தொழிற்சங்கங்களும், மஞ்சள் சட்டை எதிர்ப்பாளர்களும் வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிசில் வழமையாக இடம்பெறும் மே தின தொழிற்சங்க அணிவகுப்புக்கு முன்னால் இணைந்திருந்த முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுவொன்றை கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்துள்ளனர்.
கலகக் காரர்களும் போலீசார் மீது கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். வானின் ஜன்லல்களை உடைப்பதான காட்சியும் தொலைக்காட்சிக் காணொளிகளில் பதியப்பட்டுள்ளன. இந்த மோதல்களில் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வழமையாக இடம்பெறும் தொழிற்சங்க அணிவகுப்பில் மஞ்சள் சட்டைக் காரர்களும் மற்றைய தீவிரவாத சக்திகளுமே மேலோங்கி இருந்ததைக் காணமுடிந்தது. இடதுசாரிகளான CGT தொழிற்சங்கம் பொலிசாரின் நடவடிக்கையைக் கண்டனம் செய்துள்ளது.
14:30 க்கு அமைதியாக ஆரம்பமான ஊர்வலத்தில் திடீரென இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து பொலிசாரின் அடக்குமுறை இடம்பெற்றதாக தொழிற்சங்கம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையானது நாட்டின் ஜனநாயக முறைமையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றெனவும் CGT செயலாளர் நாயகம் உட்பட மற்றைய தொழிற்சங்க உறுப்பினர்கள் பொலிசாரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 comments: