தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஊடாகவும் நாட்டைச்சுற்றியுள்ள கரையோரப்பகுதியிலும் குறிப்பாக வடக்கு ,கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர பகுதிகளில் வலுவான காற்று நாளை முதல் அதிகரிக்கும்.
வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேற்கு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வலுவான காற்று 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் வீசும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


0 Comments